நீதி அமைச்சின் கீழுள்ள தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினால், ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சமாதான தின நிகழ்வுகள் மஹரகமையில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்றது.
இலங்கை சர்வமத தலைவர்கள் மற்றும் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, இலங்கை பாராளுமன்ற நல்லிணக்கக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங்க், நீதி அமைச்சின் செயலாளர் திருமதி வசந்த பெரேரா, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) தலைவர் திரு. ஜே.ஜே. ரத்னசிறி, நல்லிணக்க அலுவலகத்தின் பணிப்பாளர் திரு. தீப்தி லமாஹேவா மற்றும் கௌரவ அதிதிகள், தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இந்த தேசத்தின் உற்சாகமான எதிர்கால சந்ததியினர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி ஜே சங்க், சர்வதேச சமாதான தினத்தை உலகம் கொண்டாடி ஒரு நாளுக்குப் பிறகு இன்று நாம் கூடும் போது சமாதானத்தை ஓர் எண்ணக்கருவாக மாத்திரமன்றி அதற்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கு நமக்கு நாமே சவால் விடுவோம் எனத் தெரிவித்தார்.
குறிப்பாக இலங்கையின் 75வது சுதந்திர தினத்தையும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் இணைந்த பயணத்தையும் நினைவுகூரும் இவ்வேளையில் வளர்ச்சி, சவால்கள் மற்றும் பரஸ்பர மரியாதை என்பவற்றை சிந்திக்கவும் செயல்படவும் இது ஒரு சிறந்த தருணமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.