இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக தலையிடுமாறு கோரும் சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய இன்றைய தினம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்காது முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரையும் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி எதிர்க்கட்சியினரின் பொதுவான இணக்கப்பாட்டுடன் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணைக்கு அமைய விவாதம் நடத்தப்படும் என்றும், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதற்கான பிரேரணையை முன்மொழிய, ஆளும் கட்சியின் சார்பில் இது வழிமொழியப்படும் என செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலுக்கு உடனடி போர் நிறுத்தத்தை அறிவிக்க அனைத்து தரப்பினரையும் கோர வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்படவுள்ளது.