கும்பகோணத்தில் 24 மணி நேரத்தில் 612 பக்கங்களில் புனித குர்ஆனை எழுதி புதிய உலக சாதனையை படைத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரி பகுதியில் அமைந்து உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள ஜன்னத்துல் பிர்த்ஹவுஸ் அரபி மதரஸா ஆலிமா வகுப்பு மாணவிகள் 20 பேர் இஸ்லாமியர்ளின்புனித நூலான அல் குர்ஆனை கைகளால் 24 மணி நேரத்தில் எழுதும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
புனித குர்ஆன் உட்பட அனைத்து மத வேதங்களும் பல நூற்றாண்டுகளாக கையெழுத்து பிரதியாகவே மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அறிவியல் வளர்ந்து பிரிண்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவை யாவும் அச்சு பிரதிகளுக்கு மாறின.
அந்த வகையில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட புனித குர்ஆனின் கையெழுத்து பிரதிகள் பல்வேறு அருங்காட்சியகங்கள், வழிபாட்டு தலங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் புனித குர்ஆன் கையெழுத்து பிரதியாக இருந்தால் எப்படி இருக்கும் என்று மக்களுக்கு காட்டும் வகையில் கல்லூரி மாணவிகள் இணைந்து குர்ஆன் வசனங்களை தங்களுக்குள் பிரித்துக்கொண்டு அரபு மொழியில் 24 மணி நேரத்தில் எழுத முடிவு செய்தனர்.
அதன் படி அரபு மொழியில் அழகாக எழுதும் மாணவிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இரண்டு பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து ஒருவர் புனித குர்ஆன் வசனங்களை உச்சரிக்க மற்றொருவர் அதை எழுதினர்.
இப்படி குர்ஆனின் 6666 வசனங்களையும் 612 பக்கங்களில் 24 மணி நேரத்தில் அவர்கள் எழுதி சாதித்தனர்.
தனித்தனியாக எழுதப்பட்ட பக்கங்கள் புனித குர்ஆனின் வரிசைப்படி அடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டன. உலக சாதனையாக படைத்த மாணவிகள் கல்லூரி நிர்வாகிகள், சிறப்பு விருந்திகள் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினர்.
இந்த உலக சாதனை நிகழ்வை வழிநடத்திய மாணவி ரைஹானா தெரிவிக்கையில்,
“நான் கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வருகிறேன். மதர்சாவில் ஆலிமாவாகவும் இருந்து வருகிறேன். நான் மாணவிகளோடு சேர்ந்து 24 மணி நேரத்தில் குர்ஆனை கையேட்டு பிரதியாக எழுதி உள்ளேன்.
குர்ஆன் கையேட்டு பிரதியாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை காட்டுவதற்காக இந்த சாதனையை செய்து இருக்கிறோம்.” என்றார்.
Masha Allah
Good talent