மிக்ஜாம் புயல் பாதிப்பு: தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதி அறிவிப்பு: மின்னல் வேகத்தில் மீட்பு பணி

Date:

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு ரூ.450 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

அதேபோல் ஆந்திரப் பிரதேசத்துக்கு ரூ.493 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“மிக்ஜாம் புயல் தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை மிகக் கடுமையாக பாதித்துள்ளது.

இந்த இரு மாநிலங்களிலும் சேதத்தின் அளவு வேறுபட்டாலும், மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர்கள் மூழ்கியுள்ளன.

புயலின் பாதிப்புகளை நிர்வகிப்பதற்கு மாநில அரசுகளுக்கு உதவும் வகையில் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து மத்திய அரசின் இரண்டாவது தவணை பங்களிப்பை முன்கூட்டியே விடுவிக்கும்படி உள்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இரண்டாவது தவணைத் தொகையாக ஆந்திராவுக்கு ரூ.493 கோடியும், தமிழகத்துக்கு ரூ.450 கோடியும் விடுவிக்கப்படுகிறது.

மத்திய அரசு இரு மாநிலங்களுக்கான இதே அளவிலான முதல் தவணைத் தொகையை ஏற்கெனவே விடுவித்துள்ளது.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக நான் இறைவனை வேண்டுகிறேன். இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் நாங்கள் அவர்களுடன் உறுதுணையாக நிற்போம். விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று உறுதியளிக்கிறோம்” என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னதாக தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ. 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை கடிதம் எழுதியிருந்தார்.

அக்கடிதத்தில், ”சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழை பொழிந்தது. இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் வியாழக்கிழமை பார்வையிட்டார்.

எவ்வாறாயினும் சென்னையில் மழை ஓய்ந்து 4 நாட்களுக்குப் பிறகும் 6 அடியில் வெள்ள நீர் சூழந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மின்சாரம், பால்இகுடிநீர், உணவு, இயற்கை உபாதைகளைக் கழிக்க நீர் இன்றி அரசின் உதவி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

Popular

More like this
Related

காசா வரலாற்றில் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை அடக்கம்!

பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சோகமான இறுதி ஊர்வலத்திற்கு நாளை...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து பயணியர் இருக்கைகளிலும் இருக்கைப் பட்டி...

சலேவின் இடைக்கால மனு விசாரணை ஒத்திவைப்பு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தனது கைது...

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...