நான்கு தசாப்தங்களுக்குப் பின் இந்தியாவின் அழைப்பு: ஜெய்சங்கரை சந்தித்த அனுரகுமார

Date:

அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவொன்று ஐந்து நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்தக் குழு இன்று (05) இந்தியா – டில்லி சென்றுள்ளது.

இந்த பயணத்தில் அனுரகுமார திசாநாயக்கவுடன், கலாநிதி நிஹால் அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் இணைந்துள்ளனர்.

இதனிடையே, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து தமது உத்தோயோகப்பூர்வ x கணக்கில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்  இலங்கையின் நம்பகமான நண்பராகவும் நம்பகமான பங்காளியாகவும் இந்தியா செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அண்மைய நாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையினை தொடர்ந்தும் கடை பிடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இருதரப்பு உறவுகள் மற்றும் அதன் ஆழமான பரஸ்பர நன்மைகள் குறித்தும், இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மிகவும் பேசப்படும் அரசியல்வாதியாக, கட்சித் தலைவராக அனுரகுமார திஸாநாயக்க அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

கொழுப்பைத் தளமாகக் கொண்டியங்கும் சுகாதார கொள்கைக்கான நிறுவனம் (Institute for Health Policy) அண்மையில் மேற்கொண்ட ஆய்வை மேற்கோள்கட்டி சர்வதேச ஊடங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

இந்த வருடம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க மிகவும் விருப்பத்துக்குரிய வேட்பாளராக இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

1980களின் பிற்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி இலங்கை – இந்திய ஒப்பந்தம் மற்றும் இந்திய அமைதிகாக்கும் படைக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட வரலாறுகளையும் இந்திய ஊடகங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இருப்பினும், இந்தியா மீதான நிலைப்பாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் குறிப்பிடத்தக்க மாற்றத்தின் பின்னர் அதாவது சுமார் 4 தசாப்தங்களைக் கடந்து இந்த அழைப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருக்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து உத்தியோகபூர்வ அழைப்பு வருவது இதுவே முதன் முறையாகும்.

இந்த நிலையில், அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் புதுடில்லி, அகமதாபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மூன்று நகரங்களுக்குச் செல்ல உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...