இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திடம் பொதுபல சேனவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டில் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கு விசாரணை நேற்றைய தினம்(15) கொழும்பு மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குரகல விகாரை தொடர்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிட்டார்.
தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடுமையான இனவாத கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.இதனால் பல சர்ச்சைகள் எழுந்திருந்திருந்தன.
இந்நிலையில், 2016ஆம் ஆண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிட்ட கருத்து அந்த சமூகத்திற்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும் என்றும் 8 வருடங்களின் பின்னர் அது பற்றி உணர்ந்து கொள்வதாகவும் ஞானசாரதேரர் குறிப்பிட்டார்.
வழக்கின் இறுதி தீர்ப்பில் தேரருக்கு நீதிமன்றினால் கடும் தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஞானசார தேரர் மன்னிப்பு கோரியுள்ளதுடன் கவலையும் வெளியிட்டுள்ளார்.
2009க்கு பின்னரான சூழலில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளிலும் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களிலும் தீவிரமான பௌத்தமயமாக்கள் செயற்பாடுகளுக்கு தேரர் மூலகாரணமாக இருந்தார்.
அத்துடன் அச்சுறுத்தல், கொலை மிரட்டல் போன்ற மனித உரிமை மீறல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டமைக்காக பொலிஸாரினால் பல தடவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.