இஸ்மாயில் படுகொலை; நெதன்யாகுவினதும் இஸ்ரேல் அரசாங்கத்தினதும் உள்நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது

Date:

ஈரானிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவத்திற்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் தலைநகர் தெஹ்ரானில் வைத்து ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனீய்யா படுகொலை செய்யப்பட்டது கோழைத்தனமான ஈனச் செயலாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  அவர் யுத்த நிறுத்த பேச்சு வார்த்தைகளுக்கு தலைமை தாங்கி இருந்த நிலையில் இஸ்ரேலிய சியோனிசவாத அரசு இவ்வாறான பயங்கரவாத தாக்குதலை நடத்தி அவரை படுகொலை செய்திருப்பது மிகவும் அற்பத்தனமானது.

சமாதான முயற்சியில் முழுமூச்சாக கவனம் செலுத்திவந்த போது அவரது உயிர் இவ்வாறு பறிக்கப்பட்டிருப்பது பிரதமர் நெத்தன்யாஹூவினதும், இஸ்ரேல் அரசாங்த்தினதும் உள்நோக்கத்தை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.

அடுத்தடுத்து இரண்டு நாட்களில் பெய்ரூத்திலும் தெஹ்ரானிலும் நடந்துள்ள இந்தப் படுபாதகச் செயல்கள் பிராந்தியத்தையே யுத்தக் கெடுபிடிகளுக்கு இட்டுச் செல்வதாக அமைந்திருக்கின்றது.

ஈரான் மண்ணில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் படுகொலையினால் அஷ் ஷஹீத் இஸ்மாயில் ஹனீய்யாவின் இரத்தம் அந்த மண்ணில் சிந்தப்பட்டிருப்பது ஆத்திரத்தை அதிகரிக்கச் செய்திருக்கின்றது.

பாஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக 2006 ஆம் ஆண்டில் ஜனநாயக ரீதியாக காசாவில் போட்டியிட்டு வெற்றி பெற்று பலஸ்தீன அரசின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டு வரலாறு படைத்த அஷ் ஷஹீத் இஸ்மாயில் ஹனீய்யா 2019 இல் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அஞ்ஞாதவாசம் புரிந்துகொண்டும் பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை சிறப்பாக வழிநடத்திவராகத் திகழ்கின்றார்.

அப்பொழுது எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த காசா தீரத்தில் அமைந்திருந்த அல்சாட்டி அகதி முகாமில் பிறந்த அவர் வாழ்நாட்கள் முழுவதிலும் ஒரு பலஸ்தீன விடுதலை வீரராகத் தன்னை அர்ப்பணித்துச் செயலாற்றி, முதலாம் இரண்டாம் இன்திபாதாக்களிலும் பங்கெடுத்தார்.

2006 இல் இருந்து 2017 வரை ஹமாஸின் காசா தலைவராக இருந்து 2017 இல் யஹ்யா சின்வாருக்கு அதனைக் கையளித்தார். கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் தலைவர் ஹனீய்யாவின் புதல்வர்களான ஹாஸெம்,அமீர், முஹம்மத் ஆகிய மூவரும், பேரர்கள் நால்வரும் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டிருந்த போதிலும் அவர் மனம் தளரவில்லை.

இலங்கையில் நாங்கள் அவரது படுகொலையையிட்டு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை ஹமாஸ் இயக்கத்திற்கும், பலஸ்தீன மக்களுக்கும் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், முன்னெடுக்கப்படுகின்ற சமாதான முயற்சிகள் இவ்வாறான படுமோசமான கீழ்த்தரமான செயல்களால் தடைப்பட்டு விடாது, நின்று நிலைக்கும் சமாதானம் அங்கு நிலவ வேண்டும் என நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...