துபாயை பிறப்பிடமாகக் கொண்ட டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் பிரான்ஸில் கைதுசெய்யப்பட்டுள்ளதை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவரது கைது எவ்விதத்திலும் அரசியல் பின்னணி அல்ல, நீதிமன்ற விசாரணையை அடிப்படையாகக் கொண்டது என தெரிவித்ததோடு பிரான்ஸ் எப்போதும் கருத்து சுதந்திரத்தை மதிப்பளிக்கும் நாடு எனவும் அவர் தெரிவித்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு வெளியே Bourget விமான நிலையத்தில் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) கைது செய்யப்பட்டார்.
டெலிகிராம் செயலியில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகள் என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் பாவெல் துரோவ்வின் கைது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மேக்ரான் விளக்கம் அளித்து ட்வீட் செய்துள்ளார்.
அவர் தனது பதிவில், “பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸ் தொடர்பான தவறான தகவல்களைப் பார்த்தேன். கருத்து சுதந்திரம் மற்றும் தகவல் தொடர்பு, புதுமை மற்றும் தொழில்முனைவோர் உணர்வு ஆகியவற்றில், பிரான்ஸ் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது. அது அப்படியே இருக்கும்.
சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு மாநிலத்தில், குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கும், சமூக ஊடகங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் சுதந்திரங்கள் சட்டக் கட்டமைப்பிற்குள் நிலைநிறுத்தப்படுகின்றன.
முழு சுதந்திரத்துடன், சட்டத்தை அமுல்படுத்துவது நீதித்துறையின் கையில் உள்ளது. பிரான்ஸில் டெலிகிராம் தலைவரின் கைது, நடந்து வரும் நீதி விசாரணையின் ஒரு பகுதியாக நடந்தது. இது எந்த வகையிலும் அரசியல் முடிவு அல்ல. இந்த விவகாரத்தில் நீதிபதிகள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.