சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாசக்கு விமானப்படை வீரர்களால் இராணுவ மரியாதை செலுத்தியதாக கூறப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளி நேற்று (10) ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திர பிரகாஷினால் அவரது சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச பலாலியில் உள்ள விமானப்படை முகாமிற்குள் நுழைந்த போது அவருக்கு இராணுவ மரியாதை செலுத்தப்பட்டது போன்ற காணொளி வெளியாகி உள்ளது.
அத்துடன் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவ மரியாதை செலுத்தும் தற்போதைய முறைக்கமைய, துப்பாக்கி செங்குத்தாக உடலுக்கு ஏற்ப உயர்த்தப்பட்டு அவருக்கு மரியாதை செலுத்தப்படுகின்றது.
இந்த நிலையில் ஜலனி பிரேமதாசவுடன் சென்ற குழுவில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸிற்காகவே இந்த மரியாதை செலுத்தப்பட்டது எனவும் வேறு எந்த நபருக்கும் செலுத்தப்படவில்லை விமானப்படையின் பேச்சாளர் எரந்த கீகனகே குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குறித்த குழுவிற்கு ஜலனி பிரேமதாச தலைமை தாங்கினார் என்பதும் அவருக்குப் பின்னால் ஜி.எல்.பீரிஸ் நடந்து செல்வதையும் காணக்கூடியதாக இருந்தது.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் பலத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.