நாட்டில் கடந்த வாரம் நிலவிய கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால், மீண்டும் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ் வருடத்தின் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 41,212 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 22 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் மூன்று தினங்களுக்கு, விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இவ்வாறு டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டெங்கு நுளம்பு உற்பத்தி தொடர்பாக பொதுமக்கள் அதிக கவனம் செலுத்தவேண்டுமெனவும் தமது வீடுகள் மற்றும் நிறுவனங்களின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.