தங்கள் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்களின் உடல்களை ஹமாஸ் குழு இன்று இஸ்ரேலிடம் ஒப்படைக்கிறது.
அதில், 4 வயது குழந்தை ஏரியல், 9 மாத கைக்குழந்தை கிபிர் மற்றும் இந்த குழந்தைகளின் தாயார் ஷிரி பிபஸ் 83 வயதான ஓடெட் லிஃப்ஷிட்ஸ் ஆகியோரின் உடல்களும் அடக்கம்.
கடந்த மாதம் போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து ஹமாஸ் இறந்த பணயக் கைதிகளை ஒப்படைப்பது இதுவே முதல் முறை.
இதனை தொடர்ந்து வரும் சனிக்கிழமை இஸ்ரேலிய பணயக் கைதிகளில் மேலும் 6 பேரை விடுதலை செய்வதாக ஹமாஸ் குழு தெரிவித்துள்ளது. இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேலிய பணயக் கைதிகள் அனைவரையும் ஒரேகட்டமாக விடுதலை செய்ய தயார் என்று ஹமாஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது.
பணயக் கைதிகள் அனைவரையும் ஒரேகட்டமாக விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும் அதற்கு ஈடாக காசாவில் நிரந்தரமாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டுமென ஹமாஸ் தெரிவித்துள்ளது.
காசா முனையில் இருந்து இஸ்ரேல் படையினர் முழுமையாக வெளியேற வேண்டும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அதேவேளை, பணயக் கைதிகள் மீட்பு, காசா முனையில் இருந்து ஹமாஸ் குழுவை முழுமையாக அகற்றுவதே போரின் நோக்கம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.