கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை எதிர்வரும் மார்ச் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (20) உத்தரவிட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 26 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி, “கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்ததாக கூறப்படும் பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்புகளை பேணி வந்த குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (20) கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர், கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணி வேடத்தில் சென்று “கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய பிரதான சந்தேக நபரும், சந்தேக நபர் தப்பிச் செல்வதற்கு உதவி செய்த வேன் சாரதியும் நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.