பண்டிகை காலத்தில் தூரப் பிரயாணங்களை மேற்கொள்வோரின் வசதி கருதி, விசேட போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, சேவைக்காக 500 பேருந்துகள் மேலதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 40 ரயில் சேவைகள் மேலதிகமாக சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து, பதுளை, பெலியத்த, திருகோணமலை, கண்டி, அனுராதபுரம் மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு இந்த விசேட ரயில் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெள்ளிக்கிழமை (11) இரவு 7.30 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு ஒரு ரயில் இயக்கப்படுவதோடு அதே குறிப்பிட்ட நேரத்தில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
- வெள்ளிக்கிழமை (11) இரவு 7.20 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து காலிக்கு ஒரு ரயில் இயக்கப்படும். அதே நேரத்தில் காலியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
- வெள்ளிக்கிழமை (11) காலை கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வெள்ளிக்கிழமை (18) மீண்டும் திரும்பும்.
இந்த 10 சிறப்பு ரயில்களும் நீண்ட வார விடுமுறை நாட்களில் 31 பயணங்களை மேற்கொள்ளும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கான பேருந்து ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.