காசா பகுதியில் உள்ள போரை முடிவுக்குக் கொண்டு வந்தாவது பணயக்கைதிகளை விடுவிக்குமாறு இஸ்ரேலிய கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் மனுக்களில் கையெழுத்திட்டனர்.
பணயக்கைதிகளை திருப்பி அனுப்பவும், போரை முடிவுக்குக் கொண்டுவரவும் கோரி இஸ்ரேலிய விமானப்படை ரிசர்வ் படையினரின் கடிதத்தை ஆதரிக்கும் மனுவில் சுமார் 3,500 கல்வியாளர்கள் கையெழுத்திட்டனர்.
“போரின் தொடர்ச்சி அரசியல் மற்றும் தனிப்பட்ட இலாபத்திற்கே பயன்படுகிறது. இது கைதிகள், வீரர்கள் மற்றும் சாதாரண மக்கள் உயிரிழக்க வழிவகுக்கும்” என கல்வியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“பாதுகாப்பான முறையில் கைதிகள் மீட்பது மத்தியஸ்த உடன்படிக்கையின் வாயிலாக மட்டுமே சாத்தியமாகும் என்பது கடந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.”
அதேபோல், 3,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,“இது இராணுவ சேவையை நிராகரிக்க அழைப்பல்ல, உயிர்களை காப்பாற்றுவதற்கான வேண்டுகோளாகும்” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இஸ்ரேலிய மருத்துவ நிபுணர்கள் கைதிகளை விடுவிக்க போரை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வேறொரு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
150-க்கும் மேற்பட்ட முன்னாள் இஸ்ரேலிய இராணுவ வீரர்களும் கைதிகள் விடுவிக்கப்படுவதற்காக போர் நிறைவு தேவை என மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
அனடோலு செய்தி நிறுவனத்தின் படி கடந்த வியாழனிலிருந்து இப்போது வரை, சுமார் 10 மனுக்கள் இஸ்ரேலிய வீரர்களால் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மனுவில் கையெழுத்திட்ட சேவையிலிருக்கும் வீரர்களை பணிநீக்கம் செய்வதாக எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவம் மார்ச் 18 அன்று காசா மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
2023 அக்டோபரிலிருந்து, இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனக் கூறப்படும் 51,000-க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.