பலஸ்தீனத்தின் காஸாவில் பயங்கரவாத இஸ்ரேல் நடத்தி வரும் மனித இன அழிப்பைக் கண்டித்தும் தமிழ்நாடு இயல் இசைக் கல்லூரியில் நடைபெறவுள்ள இஸ்ரேல் திரைப்பட விழாவை ரத்துச் செய்யக் கோரியும் நேற்று சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சென்னை மாவட்டங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பலஸ்தீனத்தில் உள்ள காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் மனித இன அழிப்பை (Genocide) கண்டித்து நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆற்றிய உரை,
பலஸ்தீனத்தில் உள்ள காஸா நிலப்பரப்பில் வாழும் மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இன அழிப்பு பயங்கரவாத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
கனடா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாட்டின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை மற்றும் இஸ்ரேலுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதற்கான இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிவிப்புகள் காசா மீதான இஸ்ரேலின் பயங்கரவாதத்தின் உக்கரத்தை வெளிப்படுத்தியுள்ளன.
மார்ச் 18 அன்று போர் நிறுத்தம் முடிவடைந்ததில் இருந்து, 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் காஸாவில் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் உதவி மற்றும் மனிதாபிமானப் பொருட்கள் மீதான தடை ஆயிரக்கணக்கானோரை பட்டினியின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது,
உலக நாடுகள் கண்டனங்கள் தெரிவித்த போதிலும், பயங்கரவாதி நெதன்யாகு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் ஹமாஸ் செயல்பாட்டாளர்களைத் தாக்குகின்றோம் என்ற பெயரில் அப்பாவி காஸா மக்களை இன அழிப்பு செய்து வருகின்றனர்.
அக்டோபர் 7, 2023 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்த பல நாட்டு தலைவர்களும் காஸாவில் மனித துன்பத்தின் அளவை “சகிக்க முடியாதது” என்றும், இஸ்ரேலின் குண்டுவீச்சை “விகிதாச்சாரமற்ற” பதில் என்றும் கொந்தளித்துள்ளனர்.
காஸாவில் நிவாரண முகாம்களாக செயல்பட்ட கட்டடங்கள் உட்பட அனைத்து கட்டடங்களும் வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. பச்சிளம் பாலகர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். பெண்களும், முதியோர்களும் மிகக் கொடுமையான முறையில் கொன்றழிக்கப்படுகிறார்கள்.
பன்னாட்டு மனிதஉரிமை அமைப்புகள் தற்போது காஸாவில் நடைபெறுவது இனஅழிப்பு என்றே குறிப்பிடுகின்றனர். பல நாடுகள் இஸ்ரேலின் இந்த பயங்கரவாதத்தை கண்டித்த போதினும் நமது நாடு இதுவரை எந்தவொரு கண்டனமும் தெரிவிக்காதது வேதனை அளிக்கின்றது.
இருபது இலட்சம் மக்கள் வசிக்கும் காஸா நிலப்பில் இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சில் அப்பாவி குழந்தைகள் பல உயிர்கள் பலியாகியுள்ளன. நெதன்யாகு தனது அரசாங்கத்தின் நடவடிக்கைகளை “காட்டுமிராண்டித்தனத்தின் மீதான நாகரீகப் போர்” என்று வடிவமைக்க முயன்றார், ஆனால் இப்போது அவர் நடத்திவருவது தான் காட்டுமிராண்டித்தனமான அநாகரிக போராக உள்ளது.
இத்தகைய வருத்தம் மிகுந்த சூழலில் இஸ்ரேலின் திரைப்பட விழா சென்னையில் நடைபெறும் என்ற தகவல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது. இஸ்ரேலிய -சியோனிச கருத்துருவாக்கங்களை தாங்கி தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் மே 29 முதல் 31 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்ற இஸ்ரேலிய திரைப்பட விழாவை உடனே தமிழ்நாடு அரசு தடை செய்திட வேண்டும். இஸ்ரேலுடனான வர்த்த உடன்பாடுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டுமென கோருகிறேன்.-என்றார்.