குறிப்பு: தமிழ்நாட்டின் தலைமை காதியாக இருந்த காதி சாஹிப் (வயது 84) நேற்று முன்தினம் காலமானார். தமிழ் நாட்டின் நீண்ட காலமாக தலைமை காதியாக செயற்பட்டுவந்த நிலையில் இவருடைய மரணம் குறித்தும் பதவிகாலத்தில் அவர் ஆற்றிய சிறப்பான சேவை குறித்தும் பல்வேறு தரப்பினர்களும் ஆக்கங்களையும் செய்திகளையும் எழுதிய வண்ணம் உள்ளனர். அவருடைய சிறப்பான பண்பு குறித்த செய்தியை வாசகர்களுக்கு தருகிறோம்…
அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மேடை ஏறி தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்து விட்டார்கள்.
அடுத்து காதி சாஹிப் அவர்கள் மேடையில் ஏறி, ஏறிய இடத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்து விட்டார்கள்.
அதைப் பார்த்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஒரு அமைச்சரிடம் சொல்லி அவரை அழைத்து தன் ஆசனத்திற்கு அருகாமையில் வந்து அமரச் செய்யுமாறு சொன்னார்கள்.
அவரும் சென்று அழைத்தார், வாருங்கள் முதலமைச்சர் அழைக்கிறார்கள். அவர்களின் நாற்காலிக்கு அருகாமையில் உள்ள இருக்கையில் நீங்கள் இருக்குமாறு உங்களை அழைக்கிறார்கள் என்றார்.
வழமைப் போலவே காதி சாஹிப் அவர்கள் சிறிய ஒரு புன்னகையுடன் அதை தவிர்த்து விட்டார்கள்.
சற்றும் அதை எதிர்பார்க்காத முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், தானே எழுந்து வந்து காதி சாகிப் அவர்கள் அருகாமையில் வந்து, வாருங்கள் அங்கே வந்து அமருங்கள் என்று அழைத்தார்கள். அதன் பின்னர் காதி ஸாஹிப் அவர்கள் எழுந்து சென்று அந்த நாற்காலியில் அமர்ந்தார்கள்.
முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே எழுந்து சென்று அழைத்தது காதி ஸாஹிபைத் தவிர வேறு யாருக்காவது இருக்குமா?
தலைமை காதி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப், தமிழ்நாட்டில் இஸ்லாமிய சமூகத்திற்கு சேவை செய்வதற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த ஒரு இஸ்லாமிய அறிஞராவார்.
அரபு மொழி இலக்கியத்தில் எம்.ஏ, எம்.பில் மற்றும் பி.எச்.டி பட்டம் பெற்ற இவர், எகிப்தில் உள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அல் இஜாசதுல் ஆலியா பட்டமும் பெற்றுள்ளார்.
அல் இஜாசதுல் ஆலியா என்பது இஸ்லாமிய கல்வியில் மிக உயர்ந்த பட்டங்களில் ஒன்றாகும்.
இவர், கர்நாடக நவாப்களின் அரசவையில் திவானாகப் பணியாற்றிய திவான் முகமது கவுஸ் ஷர்ஃப்-உல்-முல்க் (ரஹ்மதுல்லாஹி அலைஹ்) குடும்பத்தை சேர்ந்தவராவார்.
இவரது கொள்ளு தாத்தாகாதி உபைதுல்லா நக்ஷ்பந்தி (ரஹ்மதுல்லாஹி அலைஹ்), 1880ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் மெட்ராஸ் மாகாணத்தின் முதல் அரசு தலைமை காஜியாக நியமிக்கப்பட்டிருந்தார். மறைந்த காதி சாஹிப் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக