திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார தேரர், திருகோணமலைக்கு சென்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கத்தை முதுகெழும்பில்லாத அரசாங்கம் என விமர்சித்துள்ளார்.
அத்தோடு, காஸ்ஸியப்ப தேரர் மீதான தாக்குதல் காணொளியை கண்டு ஆவேசமடைந்ததேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) இரவு வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு பின்னர் திங்கட்கிழமை (17) பிற்பகல் பௌத்த சம்பிரதாய அடிப்படையில் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரப்பப்பட்ட நிலையில் பொதுமக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இது நாட்டு மக்கள் மத்தியில் அதிகளவு பேசப்பட்டது.
இது மிகவும் கவலைக்கிடமான, கசப்பான, பாரதூரமான ஒரு விடயமாகும். கலவரத்தின் போது அதிகாரத்துடன் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அவர்களை அனுப்பிய அரசாங்கத்துக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
இலங்கையில் வாழும் பௌத்த மக்களின் உரிமையில் தான் நீங்கள் கை வைத்துள்ளீர்கள். இது பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்குகிறது. பௌத்த மதம் என்பது பல ஆண்டுகளாக இலங்கையில் உள்ள ஒரு மதமாகும்.
புத்தருக்கு சொந்தமான இலங்கை பூமியில் தான் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் வாழுகின்றனர்.
மேலும், பௌத்த சமூகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க பௌத்த மக்கள் ஒற்றுமையாக எங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பௌத்த வணக்கஸ்தலத்தை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு யாருக்கு உரிமை உள்ளது.
மக்களை தூண்டுவது அரசாங்கம் தான். கால காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது.
5 வருடங்களுக்கு தான் அரசாங்கத்துக்கு பலம் கிடைக்கும். ஆனால் பௌத்த மதத்தின் உரிமை 2 ஆயிரம் ஆண்டுகளாக இலங்கையில் உள்ளது. அது எப்போதும் மாறாது. இதுவே கடைசி. இது போன்ற செயல்கள் இனி இடம்பெறக் கூடாது. இவ்வாறான பாவ செயல்களில் ஈடுபட வேண்டாம்.
இது விகாரைக்கு சொந்தமான இடம். அங்கு என்ன செய்ய வேண்டும் என்பது விகாராதிபதியின் உரிமை. பௌத்த மதத்தின் உரிமைக்காக நாங்கள் போராடுவோம் என்றார்.
