அவுஸ்திரேலியா சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் மிக மோசமான ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.
இந்தத் தாக்குதலில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டபோது ஆயுதம் எதுவும் இல்லாமல் ஒருவரை அகமது என்பவர் காப்பாற்றினார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. யார் அந்த அகமது?
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத நிகழ்ச்சி ஒன்று நடந்த நிலையில், உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலின்போது, ஒரு நபர் துணிச்சலுடன் செயல்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவரை எதிர்கொண்டார். பார்கிங் அருகே நின்று அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இருந்தார். அப்போது காரின் பின்னால் ஒளிந்து கொண்டே அருகே வந்த அவர், மர்ம நபர் மீது பாய்ந்து துப்பாக்கியைப் பறித்தார்.
மர்ம நபரை எதிர்த்து துணிச்சலாகப் போராடிய அந்த நபர் 43 வயதான அகமது அல் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்காகப் பல்வேறு தரப்பினரும் அவரை பாராட்டி வருகிறார்கள். ஆஸ்திரேலியாவில் சமீப காலங்களில் நடந்த மோசமான தாக்குதல் இதுவாகும். அகமது மட்டும் சரியான நேரத்தைத் துப்பாக்கியைப் பறிக்கவில்லை என்றால் உயிரிழப்புகள் மேலும் அதிகரித்து இருக்கும்.
அகமது ஒரு பழ வியாபாரி, அவர் இதற்கு முன்பு துப்பாக்கியைக் கையாண்டது இல்லை. அந்த வழியாக வாக்கிங் சென்றபோது தான் துப்பாக்கிச் சூடு நடப்பதைப் பார்த்துள்ளார். உடனடியாகக் களத்தில் இறங்கி துப்பாக்கியைப் பிடுங்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலின்போது அகமது மீதும் இரு குண்டுகள் பாய்ந்துள்ளன. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
