பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சுக்கும் இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்திற்கும் (Sri Lanka Planters’ Association) இடையில் இன்று (30) கையெழுத்திடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொஹொலியத்த ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை தினசரி சம்பளம் 1,350 ரூபாவிலிருந்து 1,550 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிகமாக 200 ரூபா வரவு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக (Attendance Allowance) வழங்கப்படவுள்ளது.
இதற்கிடையில், 2026 வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்த ஜனாதிபதி, தோட்டத் தொழிலாளர்களின் தினசரிச் சம்பளத்தை 1,750 ரூபா வரை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அறிவித்திருந்தார். இதற்கமைவாக, இந்தச் சம்பள உயர்வுக்கான செலவுகளை ஈடுகட்ட 2026 வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
