இலங்கை அரசியல் அகராதியில் வறுமையை ஒழித்தல், ஏழ்மையான மக்களை செல்வந்த மக்களாக மாற்றுதல் என்ற கொள்கையுடன் பயணித்தவரே ரணசிங்க பிரேமதாசா | இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்!

Date:

இலங்கை அரசியல் அகராதியில் வறுமையை ஒழித்தல், ஏழ்மையான மக்களை செல்வந்த மக்களாக மாற்றுதல் என்ற உயர்ந்த தன்மையை உருவாக்கியவர் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்கள். அந்த சொல்லை உண்மையாக்குவதற்கு விரைவான பயணத்தை ஆரம்பித்த தலைவர் அவரேயாவார்.

எமது நாட்டில் உள்ள வறுமைக் கோட்டில் வாழும் மக்கள் குறித்து அவருக்கு பாரிய கனவொன்று காணப்பட்டது. அவர்கள் குறித்த சிந்தனையொன்று காணப்பட்டது. அந்தப் பயணத்தின் போது அவர் எதிர்கொண்ட தடைகள், குறுக்கீடுகள், சவால்கள் என்பவற்றை உடைத்தெறிந்து முன்னோக்கிச் செல்வதற்கான துணிச்சல் அவரிடம் காணப்பட்டது. அவர் அதற்காக அதிகாரத்தை தேடிச் சென்றார். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே அவர் அதிகாரத்தை நாடிச் சென்றார். பிரேமதாஸ அவர்களின் இந்த நோக்கம் என்ன என்பது குறிந்து புரிந்து கொள்ளப்பட்ட கவிதையொன்றை
‘ ரச கவி சிதுவிலி’ என்ற கவிதை நூலை மேற்கோள் காட்டி குறிப்பிட விரும்புகிறேன்.
மக்களைப் போன்று என்று இந்த மண்ணிலே
பெறுமதியான பொருள் வேறொன்றையும் காணவில்லை நான்
அதனைக் காக்க முற்படுகின்ற உள்ளம்
இந்த தங்க முத்துக்களுடன் சேர்ந்து இருக்கின்றது.

இலங்கை மக்களின் எதிர்காலம் குறித்து பிரேமதாஸ அவர்கள் கொண்டிருந்த சிந்தனைப் போக்கைப் பற்றி நினைவு கூர்கின்ற போது அமெரிக்க மக்கள் மத்தியில் சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் குறித்த சிந்தனைப் போக்கை வளர்க்கின்ற போராட்டத்ததை முன்னெடுத்த மார்டின் லூதர் கிங் 1963 ஆம் ஆண்டு வொஷிங்டனில் உள்ள லிங்கன் நினைவுத்தூபிக்கு அருகாமையில் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு மத்தியில் ‘எனக்கொரு சிந்தனை உண்டு’ (I have dream ) எனும் தலைப்பில் ஆற்றிய உரை நினைவுக்கு வருவதோடு அதன் ஒரு பகுதியை முன்வைக்க எத்தனிக்கின்றேன்.

‘ அநீதி, உச்ச கட்ட ஒடுக்குமுறை ஆகியவற்றினால் துயரப்படுகின்ற மிஸ்ஸிபி பிராந்தியம் சுதந்திரமான நீதியுள்ள பாதுகாப்புள்ள மண்ணாக மாறுவதை நான் கனவு காண்கிறேன்’
‘ எமது சமூகத்தில் காணப்படுகின்ற உயர்வு தாழ்வாகவும், தாழ்வு உயர்வாகவும் மாறுகின்ற நாளை நான் கனவு காண்கின்றேன்’
‘ ஜோர்ஜியாவில் உள்ள அடிமைகளின் பிள்ளைகளும் அடிமைகளின் உரிமையாளர்களின் பிள்ளைகளும் சகோதரத்துவத்துடன் ஒரே இடத்தில் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடுகின்ற நாளை நாண் கனவு காண்கின்றேன்’
‘எனது சிறு குழந்தைகள் நான்கு பேர் குறித்தும், அவர்களின் செயற்பாடுகள் குறித்தும் தீர்மானிக்கின்ற நல்ல சமூகமொன்றின் உருவாக்க நாளைப் பற்றி நான் கனவு காண்கின்றேன்’

எப்பொழுதும் மார்டின் லூதர் கிங் இனதும் ஆர். பிரேமதாஸ அவர்களினதும் சிந்தனைப் போக்கைப் பார்கின்ற போது இரண்டின் அடிப்படை தன்மை இரண்டாக இல்லை. இரண்டுமே ஒன்று தான். அவருடைய ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது மார்டின் லூதர் கிங் இன் சிந்தனைப் போக்கை ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் சுட்டிக்காட்டியுள்ளேன். ரணசிங்க பிரேமதாஸவை ஜனாதிபதியாக்கி எமது சமூகம் குறித்து எம்மிடம் காணப்பட்ட கனவை நனவாக்குவதே எமது ஒரே நோக்கமாக இருந்தது.

இந்த பயணத்தின் போது அவமானங்கள், துர்வார்த்தைகள், விமர்சனங்கள், பணபலம், தந்திரமான செயற்பாடுகள், துரோக செயற்பாடுகள் என்பவற்றை பொறுமையோடு எதிர்கொண்டு அவர் செயற்பட்டார். ஏதிர் செயற்பாடுகளையும் எதிரிகளையும் நண்பர்களாக்கிக்கொள்கின்ற அளவுக்கு திறமையானவராக இருந்தார். தூரநோக்கோடும் ஆழ்ந்த சிந்தனையோடும் நல்ல நோக்கத்தோடும் பயணித்த அந்தப் பயணத்தில் அவருக்குப் பின் குறித்த அந்த இடத்தை நிரப்புவதற்கு சமூகத்தில் இருந்த அடிமட்ட தொண்டர் வரைக்கும் பயணிப்பதற்கு பாதையை அமைத்துக்கொடுத்தார்.

ஜனாதிபதிப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட உடனே அவசரகால சட்டத்தை இரத்துச் செய்து கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர்கள் 1800 பேரை உடனடியாக விடுதலை செய்தமை எனது நினைவுக்கு வருகின்றது. இந்த விடுதலையின் ஊடாக உயிராபத்துக்கள் எதுவும் இன்றி சமாதானத்தின் பக்கம் நாட்டை கொண்டு செல்வதற்கான கதவை திறப்பதே நோக்கமாக இருந்தது.

ஜனாதிபதியாக தெரிவு பதவியேற்ற பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் அவர் ஆற்றிய உரையை மேற்கோல் காட்ட விரும்புகிறேன் ‘நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது ஐம்பதும் அதனோடு கூடிய தசம கணக்கில் தான் ஆனால்,இன்றிலிருந்து நான் சகல பிரஜகளுக்குமான நூற்றுக் நூறு வீத ஜனாதிபதி” என்று தெரிவித்தார்.இதன் மூலம் சகல இன மக்களுக்குமான ஜனாதிபதியாக தன்னை அடையாளப்படுத்தினார்.

அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1971 ஆண்டு இடம் பெற்ற போராட்டங்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்குகளுக்கு ஒவ்வொரு நாளும் சென்று அந்த போராட்டத்தின் நோக்கம், பின்புலம் என்பவற்றை அறிந்து கொள்வதற்கு அவர் கடும் பிரயத்தனம் எடுத்தார்.

நாட்டில் இரு துருவங்களிலும் தீப்பொறி கிளம்பியிருக்கின்ற ஒரு நாட்டையே நான் பொறுப்பேற்றேன்’ என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்ட அந்த சந்தர்ப்பத்தில் வடக்கிலும் தெற்கிலும் பாரிய வன்முறைகளுடன் நாடு பற்றியெரிந்து கொண்டிருந்தது. ஒரு துண்டுப் பிரசுரத்தின் ஊடாக பாடசாலைகள் மூடப்பட்டன, அரச அலுவலகங்கள் மூடப்பட்டன, அரசியல்வாதிகள் அவர்களின் பதவிகளில் இருந்து விலகாவிட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்று அச்சுறுத்தப்பட்டார்கள், அலுவலகங்களுக்கு செல்லும் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டார்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் குடும்பங்கள் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியிருந்தன. மாலை ஆறுமணிக்குப் பிறகு மின்துண்டிப்பு இடம் பெற்றது. பெறுமதிமிக்க அரச கட்டடங்கள், பஸ் வண்டிகள் என பொதுச் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன, வாக்களிக்கச் சென்ற வாக்காளர்கள் கொலை செய்யப்பட்டார்கள், தலைகளும் முண்டங்களும் வெவ்வேறாக காணப்பட்டன. இறந்தவர்களின் பூதவுடல்களை கழுத்துக்கு மேலே தூக்கிச் செல்வது தடைசெய்யப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் ஜனநாயகம் என்கின்ற பாரிய எதிர்பார்ப்பு காணல் நீராகவே இருந்தது. வடக்கு மாத்திரமல்ல தெற்கிலும் நாடு பற்றியெரிந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்திலே பிரேமதாஸ அவர்கள் நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

‘ உயிராபத்துக்களை ஏற்படுத்த வேண்டாம். நான் உங்களோடு கலந்துரையாட விரும்புகின்றேன். அதற்காக கண்களைக்கட்டிக் கொண்டு எந்தக் காட்டுப்பகுதிக்கேனும் நான் வரத்தயார்.’
இது பிரேமதாஸவின் மிகத் தாழ்மையான கோரிக்கையாக இருந்தது. ஜனநாயகத்தின் இருப்பை நிலைநாட்டுவதற்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவர் இவ்வாறான தாழ்மையான வேண்டுகோள்களை விடுத்தார். ஆனால் அந்த வேண்டுகோள்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஜனாதிபதியாக பதவியேற்று முதல் ஐந்து மாதங்களும் இந்தப் பிரச்சினைகளை சமாதானமாக நியாயமாக தீர்க்க வேண்டும் என்று பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டார். இறுதியாக இராணுவத்தினரைக் கொண்டு வன்முறையைக் கட்டுப்படுத்தினார். தெற்கில் மாத்திரமல்ல வடக்கிலும் உயிராபத்துக்கள் இன்றி கலந்துரையாடல், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என அவர் மேற்கொண்ட அனைத்து பிரயத்தனங்களும் பலனற்றுப் போனமை அவரை வேதனைக்குள்ளாக்கியது.

பிரேமதாஸ அவர்கள் அவரின் முதல் அமைச்சரவையை தெரிவு செய்யும் போது அவரின் கீழ் இருந்த வீடமைப்பு அமைச்சுக்கு இராஜாங்க அமைச்சராக என்னைத் தெரிவு செய்தார். அமைச்சரவை சத்தியப்பிரமானத்தில் பின்னர் அவர் வாசஸ்தலத்திற்கு என்னை அழைத்து என்னிடம் தெரிவித்த விடயங்கள் ஒரு போதும் என்னால் மறக்க முடியாதவை.

வழங்கப்பட்டிருக்கின்ற அமைச்சு என்னவென்று தெரியுமா? என அவர் என்னிடம் கேட்டார். ஆம் என்று நான் கூறினேன். என்னுடைய அமைச்சை தந்திருக்கின்றேன் என்று புன்முறுவலுடன் கூறினார். வீடமைப்பு அமைச்சின் கெபினட் அமைச்சராக சிறிசேன குறேவும் இராஜாங்க அமைச்சராக நானும் இருந்தேன்.

முதலில் மஹியங்கனை கம்உதாவ தான் வருகின்றது. எந்தவொரு அமைச்சரும் கால் வைக்காத இடங்கள் அங்கு காணப்படுகின்றது. இம்தியாஸ் மிகவும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும் அந்த மக்களின் கண்ணீரைப் போக்க செயற்பட வேண்டும் என்று என்னிடம் குறிப்பிட்டார். இதன் போது என்மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை உணர்ந்துகொண்டேன். அவர் தனது உள்ளத்திலிருந்து கதைக்கின்றார் என்பதை தெரிந்துகொண்டேன். பிரேமதாஸ நினைவுகூர்கின்ற பல சந்தர்ப்பங்களில் அவரின் இந்த வார்த்தைகள் எனது காதுகளில் கேட்பது போன்று இருக்கின்றது. வறிய ஏமை மக்களை வளமாக்கவும் இலங்கையை அபிவிருத்தின் பக்கம் கொண்டு செல்லவும் தூரநோக்கோடு செயற்பட்ட உண்மையான தலைவராக நான் அவரைக் காண்கின்றேன்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...