தென்னாபிரிக்காவின் பாரிய நிறவெறியை ஒழிப்பதற்கு பெரும் பங்காற்றிய பேராயர் டெஸ்மன்ட் டுடு தமது 90 ஆவது வயதில் காலமாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறியினை முற்றாக மாற்றி தென் ஆப்பிரிக்க மக்களுக்கு பெரும் மதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக அந் நாட்டு ஜனாதிபதி சிறில் ரமபோஷா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்மீகத் தலைவராக செயற்பட்ட இவர் நிறவெறி எதிர்ப்பு ஆர்வலராகவும் ,உலகளாவிய ரீதியாக மனித உரிமை செயற்பாட்டாளராகவும் செயற்பட்டார். இச் செயற்பாட்டிற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1984 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
தென்னாபிரிக்காவில் 1948 ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டுவரை பெரும்பான்மையினராக கருப்பினத்தவர்கள் இருந்த போதிலும் சிறுபான்மையினரான வெள்ளை இனத்தவர்கள் அடக்கு முறை மூலம் பல்வேறு உரிமை மீறல்களை அந்த காலகட்டத்தில் மேற்கொண்டிருந்தனர் மற்றும் நெல்சன் மண்டேலா போன்றவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் தமது இலக்கினை அடைந்தனர்.
இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்று ஏற்பட வேண்டும் என அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியதுடன் த ஹெல்டர்ஸ் என்ற அமைப்பின் மூலம் ஈழத் தமிழர்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான அழுத்தங்களையும் அவர் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.