டீசலில் இயங்கும், குளிரூட்டப்பட்ட வசதிகளை கொண்டதுமான பல்வகை அலகுகளைக் கொண்ட புகையிரத தொகுதி, கடன் வசதிகளின் கீழ் இந்தியாவால் வழங்கப்பட்ட நிலையில் குறித்த புகையிரதம் கல்கிசை மற்றும் காங்கேசன்துறை இடையிலான நகர்சேர் சேவைகளில் இணைக்கும் ஆரம்ப நிகழ்வு (09) ஆம் திகதி நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அத்துடன் பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் போக்குவரத்து அமைச்சரை வரவேற்றார்.
போக்குவரத்து அமைச்சருடனான பேச்சுவார்த்தையின் போது அயலுறவுக்கு முதலிடம் கொள்கைக்கு அமைவாக இலங்கையுடனான உறவுகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வழங்கியுள்ள முன்னுரிமை குறித்து பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர், சிக்கலான சூழ்நிலைகளின் போது இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளதாகவும், பிரதி உயர் ஸ்தானிகர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரு நாட்டு மக்களுக்கிடையிலான பரிமாற்றங்களுக்கு வழிகோலும் பரஸ்பரம் நன்மை தரும் ஒத்துழைப்பு திட்டங்கள் மீது உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கொண்டுள்ள ஆர்வத்தையும் அவர் மேலும் வலியுறுத்தி கூறினார்.
கொவிட்- 19 தொற்று காலப்பகுதியில் வழங்கப்பட்டு வரும் ஆதரவு உட்பட இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் நிலையான ஆதரவுக்காக போக்குவரத்து அமைச்சர் இச் சந்தர்ப்பத்தில் நன்றிகளை தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இருதரப்பு ஈடுபாடுகளை மேம்படுத்துவதில் இந்திய அரசாங்கம் இந்த ஆண்டில் மிகுந்த ஆர்வத்தினை கொண்டிருப்பதாக பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப் கூறியிருந்தார். இளைஞர்கள் மீதான விசேட கவனத்துடன் ஜனவரி 09ஆம் திகதி இவ் வருடத்தின் புலம்பெயர் இந்தியர்கள் தினம் இந்திய அரசாங்கத்தினால் கொண்டாடப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் ஆனந்த கல்லூரியில் வழங்கிய பிரசங்கம் உட்பட மகாத்மா காந்தி இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயங்களையும் பிரதி உயர் ஸ்தானிகர் இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்டினார்.
இந்திய கடன் உதவியின் கீழ் RITES நிறுவனத்தால் வழங்கப்பட்ட இந்த ரயில் தொகுதிகள் மேல் மாகாணம் மற்றும் வட மாகாணத்திற்கு இடையிலான துரித பயணத்தை மேற்கொள்வதற்கு ஆதரவாக அமையும். இலங்கையில் இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு புகையிரத திட்டங்களுள் இக் குறிப்பிட்ட புகையிரதம் உள்ளடங்குகின்றது.
இந்திய கடன் உதவியின் கீழ் ரைட்ஸ் (RITES) நிறுவனத்தால் வழங்கப்படும் பயணிகள் பெட்டிகள் உட்பட பல்வேறு நடைமுறையில் உள்ள திட்டங்கள் இவற்றில் உள்ளடங்குகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள 160 புகையிரத பெட்டிகளில் 120 புகையிரத பெட்டிகள் ரைட்ஸ் நிறுவனத்தால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் மற்றொரு இந்திய நிறுவனமான IRCON மாகோ – அனுராதபுரம் – ஓமந்தை இடையிலான புகையிரத பாதையை தரமுயர்த்தும் திட்டத்தினை அமுல்படுத்தி வருகின்றது.
3.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பெறுமதியிலான அபிவிருத்தி ஒத்துழைப்பினை இலங்கையில் இந்திய அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நிலையில் இதில் 570 மில்லியன் அமெரிக்கடொலர் பெறுமதியானவை நன்கொடை திட்டங்களாக அமுல்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் முன்னுரிமைக்கு இணைந்து செல்லும் வகையில் இந்திய அரசாங்கத்தின் இலங்கைக்கான அபிவிருத்தி செயற்பாடுகளில் புகையிரத பாதைகளை நவீனமயப்படுத்தல் மற்றும் புதிய புகையிரத கட்டமைப்பினை உருவாக்குதல் மிகவும் முக்கிய கவனத்தை பெற்றிருக்கும் விடயங்களாகும்.