கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பள்ளிவாசல்கள் மூடப்பட்ட காரணத்தினால் சமூகத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் பள்ளிவாசலுடன் இருக்கின்ற தொடர்பை இழந்துள்ள சூழ்நிலையை சமூகத்தில் பரவலாக அவதானிக்க முடிகின்றது.இஸ்லாத்தை பொறுத்தவரையில் தொழுகை என்பது கட்டாய கடமை .சிறு வயது முதலே அதனை ஊக்குவிக்க வேண்டும்,அதற்காக பயிற்றுவிக்க வேண்டும், 7 வயதாகும் போது தொழுகையின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்,10 வயதாகும் போது கண்டித்து தொழுகையை நிலைநாட்ட பயிற்றுவிக்க வேண்டும். என்ற அளவுக்கு வலியுறுத்தப்படுகின்ற முக்கிய கடமையாகும்.அப்படிப்பட்ட கடமை விடயத்தில் பொறுப்புணர்வுள்ளவர்கள் அலட்சியமாக இருக்க முடியாது.அந்த வகையிலே, சிறு வயதிலே தொழுகைக்காக பயிற்று விக்கும் நோக்கோடு மிகச் சிறந்த ஒரு முன்மாதிரி செயல் வெலிகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் (09) இடம்பெற்ற வெலிகம ஸலாம் மஸ்ஜிதின் ஸலாஹ்(தொழுகை) போட்டியில் தொடர்ச்சியாக கடந்த இரண்டு மாதங்களாக சுபஹ் தொழுகையில் அவ்வல் தக்பீருடன் ஜமாஅத்தாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சைக்கிள்கள் உட்பட பல பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அவர்களுடைய இந்த முன்மாதிரி செயலை நாங்கள் பாராட்டுவதோடு , இவ்வாறான முன்மாதிரி களை அடிப்படையாக கொண்டு பரவலாக நாட்டிலே முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் எம்முடைய வளரும் சந்ததியினர் ஆன்மீக ரீதியான சிறந்த ஒரு பயிற்சியை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதை நினைவூட்டிக் கொள்கின்றோம்.
போட்டி நிகழ்ச்சி முடிவடைந்து இன்றுடன் 20 நாட்கள் கடந்தும் மாணவர்கள் தொடர்ந்தும் பள்ளிவாசலுக்கு வருகைதந்துகொண்டு இருப்பது பாராட்டுக்குரியது.