இலங்கை சீனாவிடம் கடன்தொகையொன்றை பெறுவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடி, கடன் கொடுப்பனவுகளை ஒத்திவைத்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் ஏற்பாடு உள்ளிட்ட மேலதிக நிதி உதவியை இலங்கை சீனாவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் இலங்கை சீன வங்கிகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கடன் தவணையாக செலுத்த வேண்டியுள்ளது.
இந்நிலையில், நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து வெளியேறும் வரை இந்த கொடுப்பனவுகளை மீண்டும் திட்டமிடுவதற்கு அரசாங்கம் உதவி கோரியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, உள்ளூர் தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களை சீனாவில் இருந்து வாங்குவதற்கு தனியான கடன் ஏற்பாட்டையும் அரசாங்கம் கோரியுள்ளது.
மேலும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை மேலும் நிதியுதவி கேட்டுள்ளது என்றும், இரு தரப்பும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் மட்டுமே உறுதி செய்ய முடியும் என சீனத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுள்ளது.
மேலும், இந்தியாவில் இருந்து எரிபொருளை வாங்க 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.