யாழ்ப்பாணம் பயணம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்களை வீதியில் வழிமறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நேற்றையதினம் யாழ் விஜயம் செய்த பிரதமர், மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதனையடுத்து இன்று மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிலையில் குறித்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க திட்டமிடப்பட்டது.
அதில் கலந்துகொள்வதற்காக முல்லைத்தீவில் இருந்து பேருந்தில் வருகைத் தந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மட்டுவில் அம்மன் கோவிலுக்கு அருகில் பொலிஸார் வழிமறித்துள்ளனர்.
அத்தோடு வாகனத்தில் இருந்து எவரையும் இறங்க விடாதவாறு, வாகனத்தின் இரு வாசல்களிலும் காவலுக்கு நின்ற பொலிஸார் சாரதியையும் கடும் விசாரணைக்குட்படுத்தினர்.
இருப்பினும் பேருந்தில் இருந்து கீழிறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியில் அழுது புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேவேளை, மத்திய நிலைய பகுதியில் பெருமளவான பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு 2 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் நீதி கோரி பயணித்த தம்மை பஸ்ஸில் இருந்து இறங்கவிடாமல் பொலிஸார் தடுத்ததாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.