போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற சுமார் 132 போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சர்வதேச பொலிஸான இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேடப்படும் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள டுபாயில் தஞ்சம் புகுந்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நேற்றையதனம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, தேடப்படும் குற்றவாளிகளை வீழ்த்துவதற்கான விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம், விசேட அதிரடிப் படையினர், சுங்கப் பிரிவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சம்பாதித்த அசையா மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதேவேளை, கடந்த வருடத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 95,000 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெரோயின், கஞ்சா மற்றும் செயற்கை போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.
அதன்படி, 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மொத்தமாக 1,630 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
இதன்போது 15,000 கிலோகிராம் கஞ்சாவும் 377 கிலோகிராம் மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட செயற்கை போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும், இந்த வருடத்தில் இதுவரையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிங்களம் மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.