ஜனாதிபதியிடம் உள்ள நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுவர முடியும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வெளிநாடுகளில் இருந்து கடன்களை பெறும்போது அந்த கடன் தொகையை நாட்டின் உற்பத்திக்காக பயன்படுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற அமர்விலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்று மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளிடம் மருந்துகளை கடனாக பெறுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சியாகிய நாங்கள், அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்று உபகரணங்களை வழங்கி வருவதாகவும்அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும், நாங்கள் அதிகாரம் இன்றியே இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். ஆனால் அரசாங்கத்திடம் அதிகாரம் இருந்தும் எரிபொருள், அரிசி, எரிவாயு அனைத்திற்கும் மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலைமை உருவாகியுள்ளதாக அவர தெரிவித்தார்.
இதேவேளை பிரதமர் அவர்களே, நான் கேட்கும் சில கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா? இந்த நாட்டில் எப்போது எரிவாயு வரிசைக்கு தீர்வு கிடைக்கும், எரிபொருள் பிரச்சினை எப்போது தீரும்.
மண்ணெண்ணெய் வரிசை எப்போது முடிவுக்கு வரும். இந்த கேள்விகளை நாங்கள் கேட்கவில்லை. மக்கள் கேட்கிறார்கள். இவைகளுக்கு உங்களால் பதவிளிக்க முடியாது இனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல இந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்து விலக வேண்டும், ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும். ஆளுங்கட்சியில் இருந்து விலகிய சுயாதீனக் குழு இப்போது எங்களோடு கைகோர்த்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.