சிங்கள-தமிழ் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு திரும்புவதற்கு வசதியாக இலங்கை போக்குவரத்து சபையின் சிறப்பு தொலைதூர பேருந்துகள் இன்று முதல் இயங்கவுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் ஊழியர்கள் புத்தாண்டு விடுமுறையில் இருப்பதால், நேற்று திட்டமிடப்பட்ட பஸ்களின் எண்ணிக்கையை இயக்க முடியாது என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இன்று சுமார் 300 தொலைதூர பேருந்துகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மக்களை மீண்டும் பிரதான நகரங்களுக்கு அழைத்து வருவதற்காக நீண்ட தூர தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து டீசல் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதன்படி, தனியார் பேருந்துகள் டீசலை பல் மாதிரி மையத்தில் நிறுவப்பட்டுள்ள சிறப்பு மையங்களிலும், நாடளாவிய ரீதியில் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
எவ்வாறாயினும், நீண்ட தூர பேருந்துகள் திட்டமிடப்பட்ட வழக்கமான நேர அட்டவணையின்படி இயங்கும் என்றும் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அளவில் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் வழமைக்கு திரும்பும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புத்தாண்டுக்காக ஊர்களுக்கு சென்றவர்கள் கொழும்பு திரும்புவதற்காக விசேட புகையிரத சேவையொன்று எதிர்வரும் 17ம் திகதி முதல் முன்னெடுக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.