2019 ஆம் ஆண்டு 21 ஆம் திகதி உலகம் முழுவதும் ஈஸ்டர் தினம் கொண்டாடப்பட்டாலும், இலங்கைக்கு அன்றைய நாள் ஒரு கறுப்பு நாளாகவே அமைந்தது.
ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 3 வருடங்கள் கடந்துள்ளன.
மூன்றாண்டு நிறைவு விழா இன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த கொண்டாட்டத்தில் இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர்கள், பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள், துறவிகள் மற்றும் பிற மதத் தலைவர்கள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொண்டாடப்பட்ட ஈஸ்டர் தினத்தன்று, மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 277 பேர் உயிரிழந்திருந்தனர். 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
அத்துடன், 40 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 45 சிறார்களும் இந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்திருந்தனர்.
இந்த தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று வருடங்கள் கடக்கவுள்ள நிலையில், இன்று வரை தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடத்தப்படும் போராட்டங்களிலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான கோரிக்கைகளும் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.
நடாளாவிய ரீதியில் இன்றைய தினம் அனைத்து மத ஸ்தலங்களிலும் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு கூறும் வகையில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றது.
இதேவேளை இன்று காலை வீடுகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி, உயிரிழந்த மக்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறும் பேராயர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான மக்களுக்காக வழிபாடு நடத்துமாறு பௌத்த மக்களின் மதஉயர்பீடமான மல்வத்தை பீடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்றைய நாளில் நாம் அனைவரும் அமைதிப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம். உறவுகளை இழந்த மக்களின் வேதனையில் நாமும் பங்கு கொள்வோம்.