காணாமல் போன சமூக ஊடக இளைஞர் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவை கண்டுபிடிக்க உடனடியாக தலையிடுமாறு இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளது.
இளம் ஊடகவியலாளரும் சமூக ஊடக ஆர்வலருமான அனுருத்த பண்டாரவை மோதரை பொலிஸில் இருந்து வந்ததாக கூறிக்கொள்ளும் குழுவினனரால் நேற்று இரவு கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், அவ்வாறான ஒரு நபரை கைது செய்யவில்லை என, மோதரை பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த கடிதத்தில் , இன்று (02) அதிகாலை மோதரை பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுருத்த பண்டார என்ற இளம் செயற்பாட்டாளரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.
அதற்கமைய மோதர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வினவியபோது, அவ்வாறு கைது செய்யவில்லை என மறுத்துள்ளார்.
எவ்வாறாயினும், மோதர பொலிஸாரின் குற்றத்தடுப்புப் பிரிவினர், தமது மகனை ஏதோ வேலைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக தன்னிடம் தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் விரைந்து தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அனுருத்த பண்டார பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இளம் ஊடகவியலாளர் சங்கத்திற்கு அறிவித்துள்ளது.
அனுருத்த பண்டாரவை தம்மிடம் வைத்திருப்பதாக மோதர குற்றப்பிரிவு மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ‘கோட்டா கோ ஹோம்’ என்ற முகநூல் பக்கத்தை நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
“அரசின் மீதான அதிருப்தி உணர்வுகளை தூண்டுவது அல்லது தூண்ட முயற்சிப்பது குற்றமாக கருதும் இலங்கை தண்டனைச் சட்டத்தின் 120வது பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று காவல்துறை கூறுகிறது” என பாராளுமன்ற உறுப்பினர் நாணயக்கார மேலும் கூறினார்.