நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை போக்க புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய நிறைவேற்று சபையும் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சி என்ற வகையில், இந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளோம். இந்தப் பின்னணியில், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடாகும்.
மேலும் சுதந்திரக் கட்சி கடந்த இரண்டு மாதங்களில் நெருக்கடியை சமாளிப்பது தொடர்பாக மூன்று தடவைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாகவும், அதில் ஒன்று இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது எனவும் சிறிசேன தெரிவித்தார்.
அவ்வாறானதொரு அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான சூழலை ஜனாதிபதியால் மட்டுமே உருவாக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
‘இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதற்கு மேலதிகமாக, பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் உள்ளடக்கிய நிறைவேற்று சபையொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதியிடம் முன்மொழிந்துள்ளோம்.
அவ்வாறான செயற்குழு நியமிக்கப்பட்டால் அதன் உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியும் பிரதமரும் செயற்பட வேண்டும்.
அத்துடன், ராஜபக்சக்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதே தற்போது மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. அதையும் கேட்டறிந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என்று அவர் மேலும் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து வெளியேறி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட சுதந்திரக் கட்சி ஏப்ரல் 3ஆம் திகதி தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.