பாகிஸ்தானின் 75 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில், மொத்தம் 29 பிரதமர்களே ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களில் 5 ஆண்டுகள் பதவி காலத்தை எவருமே முழுமையாக ஆட்சி செய்யவில்லை.
1947ம் ஆண்டு முதல் பிரதமராக லியாகத் அலி கான் பதவியேற்றார். சுமார் 4 ஆண்டுகள் மேல் பதவி வகித்த அவர் படுகொலை செய்யப்பட்டார்.
அன்று முதல் இன்று வரை பிரதமர்களாக இருந்தவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகள், நேரடி இராணுவ புரட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகளில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக கட்டாய இராஜினாமாக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் படுகொலைகளும் நடந்துள்ளது. இதில், பிரதமர்கள் மிக குறுகிய காலம் 2 வாரங்கள், மிக நீண்ட காலம் 4.2 ஆண்டுகள் பதவி வகித்துள்ளனர்.
நவாஸ் ஷெரீப் மட்டும் மூன்று முறை (1990, 1997, 2013) பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1993ஆம் ஆண்டு மட்டுமே 365 நாட்களில் 5 பிரதமர்கள் மாறி மாறி பதவியேற்றுள்ளனர்.
1947 முதல் பதவிக் காலம் முன்கூட்டியே முடிவடைந்த பிரதமர்கள் பட்டியல் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் காபந்து பிரதமர் மற்றும் மற்றொரு பிரதமரின் பதவிக் காலத்தை நிறைவு செய்தவர்கள் பெயர்கள் இடம் பெறவில்லை.
அதேவேளை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சி, அடுத்த ஆட்சியை அமைக்கும்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை பொறுத்த வரையில், பிடிஐ கட்சிக்கு 155 எம்.பிக்கள் உள்ளனர். ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை. இதனால், எம்.க்யூ.எம்-பி (7 ஆசனங்கள்;), பி.ஏ.பி (5), பி.எம்.எல் (க்யூ) (5), ஜி.டி.ஏ (3), ஏஎம்எல் (1), ஜே.டபிள்யு.பி (1) மற்றும் 2 சுயேட்சைகளின் ஆதரவுடன் கடந்த 2018இல் ஆட்சி அமைத்தது.
இதில், எம்.க்யூ.எம்-பி, பி.ஏ.பி, பி.எம்.எல் (க்யூ) கட்சிகள், தற்போது எதிர்க்கட்சிகள் பக்கம் சாய்ந்துள்ளன. இதுதவிர, பி.டி.ஐ கட்சியிலேயே இம்ரானுக்கு அதிருப்தி எம்பி.க்கள் இருக்கின்றனர்.
இப்படி இருந்தும், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் தரப்பில் 174 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
முன்னதாக அவர்கள் நடத்திய மாதிரி வாக்கெடுப்பில் 192 வாக்குகள் பதிவாகின. ஆட்சி அமைக்க, பெரும்பான்மையை நிரூபிக்க 172 எம்பிக்கள் ஆதரவு தேவை. நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இதை விட 2 ஓட்டு மட்டுமே அதிகமாக கிடைத்துள்ளது.
எனவே, இன்று பெரும்பான்மையை நிரூபிக்கும் போது இம்ரானின் பி.டி.ஐ கட்சி, எதிர்தரப்பில் இருந்து சிலரை வளைக்கும் பட்சத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
இதையும் மீறி ஷெபாஸ் ஆட்சி அமைத்தாலும், பெரும்பான்மையை நிரூபிப்பதற்குள் கட்சித் தாவல், குதிரை பேர முயற்சிகளில் இம்ரான் ஈடுபட்டால், ஷெபாசின் பதவி தப்பிப்பது கஷ்டம்.
எனவே, பாகிஸ்தானில் அடுத்து வரும் காலங்களில் நிரந்தர ஆட்சி அமைவதற்கு வாய்ப்பில்லை. எந்த நேரத்திலும், எதுவும் நடக்கலாம். இம்ரான் கூட மீண்டும் ஆட்சிக்கு வரலாம். ஆனால், அதற்கு இராணுவ தளபதி பஜ்வாவின் ஆசி தேவைப்படும்.
பதவியை இழந்த பிறகு பிடிஐ கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறிய இம்ரான் கான்,
”பாகிஸ்தான் 1947ல் சுதந்திரமடைந்தது. தற்போது, ஆட்சி மாற்றத்திற்காக வெளிநாட்டு சதிக்கு எதிராக இன்று மீண்டும் சுதந்திரப் போராட்டத்தை தொடங்குகிறது. நாட்டின் இறையாண்மையையும் ஜனநாயகத்தையும் எப்போதும் பாதுகாப்பது நாட்டு மக்கள்தான்’ என கூறி உள்ளார்.
அடுத்த பிரதமராக வர அதிக வாய்ப்புள்ள ஷெபாஸ் ஷெரீப், லாகூரை சேர்ந்த பஞ்சாபி பேசும் காஷ்மீரி குடும்பத்தை சேர்ந்தவர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், அமிர்தரசில் வசித்த அவரது குடும்பம், நாடு பிரிவினைக்குப் பிறகு, லாகூருக்கு இடம் பெயர்ந்தது.
தனது சகோதரர் நவாஸ் ஷெரீப்புடன் 1980ல் அரசியலில் களம் இறங்கினார். 1988ல் நவாஸ் பஞ்சாப் மாகாண முதல்வரான போது, ஷெபாஸ் முதல் முறையாக அம்மாகாண எம்.எல்.ஏ ஆனார்.
மூலம்: அல் ஜசீரா