உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத்துக்கு ‘பாரதியின் தமிழ் மகன்’ எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற மாபெரும் கலை நிகழ்ச்சியில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வழியில் பயணித்து தமிழ் மொழியின் பெருமையினை உலகெங்கும் ஓங்கி ஒலிக்கச்செய்யும் தமிழ் பணியினை கௌரவித்து பி.எச். அப்துல் ஹமீத்துக்கு, பாரதியின் தமிழ் மகன் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ் விருதினை இலங்கையின் முன்னணி தமிழ் ஊடக நிறுவனங்களும், முன்னணி தமிழ் வர்த்தக நிறுவனங்களும் இணைந்து வழங்கியுள்ளன.
இதன்போது, தென்னிந்திய விஜய் தொலைக்காட்சி புகழ் பாடகர்களான மூக்குத்தி முருகன், முத்துச்சிற்பி, மானசி, பரத் மற்றும் இலங்கையின் பிரபல ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான நவநீதன் ஆகியோரும், முன்னணி தொழிலதிபர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
பாரதியின் தமிழ் மகன் விருதினை தனது கரங்களில் ஏந்திக்கொண்ட அப்துல் ஹமீத் இதுபோன்றதொரு விருது இதற்கு முன் பெற்றதில்லை என்று குறிப்பிட்டமை, இவ்விருதுக்கே பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.