சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 106ஆவது பிறந்த தினம் இன்றாகும்.
இதன் போது முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டார நாயக்க தனது முகப்புத்தகத்தில், பொதுச் சேவைக்கு நேர்மையாக அர்ப்பணித்த பொதுப் பணத்தை ஐந்து காசு கூட திருடாமல் நீங்களும் உங்கள் தந்தையும் சொன்ன உதாரணம் எங்களை மிகவும் பாதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதனால் தான் சில தலைவர்களின் சாபத்தில் இருந்து இன்று பொதுமக்களாக விலகி நிற்கிறோம். அதற்குக் காரணம் நாங்கள் பொதுப் பணத்தைத் திருடவில்லை.
நீங்கள் எங்களுக்கு வழங்கிய முன்மாதிரி மற்றும் வழிகாட்டுதலுக்கு நன்றி அம்மா எனவும் சந்திரிக்கா குமாரதுங்க தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா (ஏப்ரல் 17, 1916 – ஒக்டோபர் 10, 2000) இலங்கையின் ஓர் அரசியல்வாதியாவார்.
இவர் இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை, 1960-1965, 1970-1977 மற்றும் 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தவர்.
இவரே உலகிலேயே முதலாவது பெண் பிரதமருமாவார். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தவர். இவரது கணவர் மறைந்த முன்னாள் இலங்கை பிரதமர் சொலமன் பண்டாரநாயக்கா. மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கா இலங்கையின் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தவர்.
தனது கணவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா கொல்லப்பட்டபின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
ஜூலை 21, 1960 இல் முதன் முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965 இல் நடந்த பொதுத்தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 1970 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கட்சியை வழி நடாத்தினார்.
1970 பொதுத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து பெரும் வெற்றி பெற்று இரண்டாம் முறை மீண்டும் பிரதமரானார். 1977 இல் நடந்த தேர்தலில் கட்சி படு தோல்வி அடைந்தது.
1980 இல் அன்றைய ஜே. ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சியினால் ஊழல் குற்றச்சாட்டுகளில் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை ஏற்கத் தடை செய்யப்பட்டார்.
1994ல் தமது மகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க இலங்கையின் ஜனாதிபதியானதும் தமது தாயாரான சிறமாவோவை மீண்டும் பிரதமராக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.