நுகேகொடை மிரிஹான பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணைகள் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தினால் 39 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவத்தில் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 18 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 24 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மிரிஹானவில் நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது குற்றவியல் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படவுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படும் என மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சட்டத்தரணிகளுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த கலரவத்தின் போது, கைது செய்யப்பட்ட 55 பேரையும் தற்போது கங்கொடவில நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் இலவசமாக வாதிடுவதற்கு 300 சட்டத்தரணிகள் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.