தேசிய புத்தாண்டை முன்னிட்டு வெளிமாவட்டங்களுக்கு சென்ற மக்கள் மீள கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு திரும்புவதற்காக இன்று முதல் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக சுவர்ணஹங்ச இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 200 மேலதிக பஸ்களை இன்றைய தினம் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளைய தினத்திற்குள் பயணிகள் போக்குவரத்தை முற்றாக வழமைக்கு கொண்டு வர முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியாக தமது சங்கத்திற்கு உரித்தான பஸ்களில் 1,500 பஸ்களை மாத்திரமே இன்றைய தினம் சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டீசல் இன்மையால் பஸ் போக்குவரத்தை உரிய வகையில் முன்னெடுக்க முடியாதுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரயில் போக்குவரத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் வழமைக்கு கொண்டு வர முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதுவரை தூர சேவை ரயில்கள் மாத்திரம் நேர அட்டவணைக்கு அமைய சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அலுவலக ரயில்களை பயணிகளின் தேவைப்பாடுகளுக்கமைய முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.