தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் பேரணி இன்று இராண்டவது நாளாக இன்றையதினம் இடம்பெற்று வருகின்றது.
அதற்கமைய நேற்றைய தினம் பேருவளை முதல் வாதுவ வரை குறித்த மக்கள் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இன்று வாதுவையில் ஆரம்பமாகி மொரட்டுவை நோக்கி நகர்கிறது. காலி – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
தற்போதைய ஆட்சியாளர்களை பதவி விலகக் கோரியும் மக்கள் நேய ஆட்சி ஒன்றை நாட்டில் ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் பேருவளை நகரிலிருந்து ஆரம்பித்த பாதயாத்திரை இரவு 7 மணியளவில் பயாகலையை வந்தடைந்தது.
இன்று காலை பயாகலை நகரிலிருந்து காலை 9.30 அளவில் மீண்டும் ஆரம்பிக்கும் மக்கள் பேரணி மொரட்டுவையை வந்தடையவுள்ளது.
நாளைய தினம், (19) மொரட்டுவையில் இருந்து ஆரம்பித்து கொழும்பை வந்தடையவுள்ளது. இதேவேளை இந்த மக்கள் எழுச்சிப்போராட்டத்தில் முடியுமானவர்கள் கலந்து கொள்வதன் ஊடாக தமது பங்களிப்பை வழங்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்களும் இந்த மக்கள் பேரணியின் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திஸாநாயக்க,
மக்கள் இப்போது செய்ய வேண்டியது எதிர்ப்புகளுக்கு அப்பால் சென்று இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, சட்டத்தின் ஆட்சி, மோசடி மற்றும் ஊழலற்ற அரசாங்கம், சொத்துக்களை கைப்பற்றும் அரசாங்கம் ஆகியவற்றை கட்டியெழுப்ப வேண்டும். ஊழல், மற்றும் மோசடி செய்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகளை தண்டிக்கும் அரசாங்கம்.
இதற்கான பரந்த தளத்தை தேசிய மக்கள் சக்தி உருவாக்கியுள்ளது என்றும், இதற்காக மக்களை ஒன்று திரட்டுவதற்காக இன்று இந்த நடைப்பயணத்தை தயார் செய்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.