பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் (09) நடத்தப்படவுள்ளது.
பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்த அந்த நாட்டு உயர் நீதிமன்றம், பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 9-ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்ப்பளித்தது.
அதற்கமைய பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது கடந்த 3ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தாமல், துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்தார்.
அதையடுத்து இம்ரான்கான் பரிந்துரையால் பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கலைத்து உத்தரவிட்டார். இது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை அந்த நாட்டின் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணை முடிவில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி ஆரிப் ஆல்வியின் நடவடிக்கை சட்ட விரோதமானது எனவும், அது செல்லாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அத்துடன் பாராளுமன்றத்தை 9ஆம் திகதி(இன்று) கூட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடுமாறு சபாநாயகர் ஆசாத் காசியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இன்று காலை 10.30 மணிக்கு இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
அதன்படி பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.