உணவுப் பற்றாக்குறையினால் குழந்தைகளின் போசாக்கின்மை அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்று பிரத்தியேக முறையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் நால்வர் கடுமையான போஷாக்குக் குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டுவதாகவும், இந்த குழந்தைகளுக்காக விசேட போஷாக்கு உணவுகள் வழங்க முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்தியர் தெரிவித்தார்.
வார்டில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 20 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டுகிறார்கள், என்றார்.
இந்நிலைமையை தடுக்கும் வகையில் வீட்டுத்தோட்டம் அமைப்பதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவதுடன் குறுகிய காலத்தில் போஷாக்கு நிறைந்த உணவுகளை பயிரிடுவதில் விசேட கவனம் செலுத்த வேண்டுமென தீபால் பெரேரா சுட்டிக்காட்டினார்.
மேலும், தனது வீட்டு முற்றத்தில் இடம் குறைவாக உள்ள போதிலும், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதேவேளை, நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும், அண்மைய நாட்களில் 100க்கும் அதிகமான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை கொவிட் நோயின் போது மன அழுத்தம் மற்றும் உடல் உழைப்பு இல்லாமை ஆகியவை குழந்தைகளின் நீரிழிவு வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.