சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவது என்பது மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
09 சுயேட்சைக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பதில் சில கட்சிகள் அர்ப்பணிப்புடன் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
மேலும், நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையை கருதியாவது, ஒன்றிணைந்து பயணிக்கும் மனநிலை நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு இல்லை. ஜனாதிபதியும் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, சர்வகட்சி அரசாங்கம் சாத்தியப்படாது. தற்போதைய அரசாங்கம், தொடர்ந்து பயணிக்கவே முயற்சிக்கின்றது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சரியான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என விஜய தரணி தேசிய பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரர் ஊடகங்களுக்கு முன்பாக தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலி மூன்று மாணவர்களையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 09 நாட்களாக தடுத்து வைத்து விசாரணை நடத்தியமை தொடர்பில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.