பேராதனை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடி வதை சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள் குழுவிற்கு அதே பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினால் புதிய மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்கப்பட்டு காயமடைந்த இரண்டு மாணவிகளும் இரண்டு மாணவர்களும் சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், 30 பேர் கொண்ட மாணவர்கள் குறித்த நான்கு மாணவர்களையும் தாக்குவதற்கு வருகைத் தந்துள்ளதாகவும் இவர்கள் பகிடிவதைக்கு ஆதரவான மாணவர்கள் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது, இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விசாரணையில் தெரிவித்ததுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு 4 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.