மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இனக்குழுக்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து இலங்கை அரசாங்கமும் அதன் பாதுகாப்புப் படையினரும் தப்ப முடியாது என்பதால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில் இலங்கை தொடர்பில் ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சபையில் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் இலங்கைக்கான இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் மற்றும் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சம்பந்தன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு ஆரம்பமாகியுள்ளது. அந்த அமர்வின் முதல் நாள் சபையின் பதில் ஆணையாளர் இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையை எங்கள் கட்சி பெரிதும் பாராட்டுகிறது.
இந்த சபையில் இலங்கை தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த முன்மொழிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பல பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது.
மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனக்குழுக்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பிரச்சனைகளுக்காக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் மிகவும் மெதுவான கொள்கையையே பின்பற்றியது.
தேசிய பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவில்லை. அந்தச் சட்டத்தின் கீழ் இன்னும் கைதுகள் செய்யப்படுகின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.
ஆனால் அந்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளை குப்பையில் போட்டு எப்பொழுதும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றி வருகின்றது.
ஆனால் இம்முறை ஜெனீவாவில் இலங்கை தப்பிக்க முடியாத வகையில் மிகவும் வலுவான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரிக்க வேண்டும். இம்முறை பேரவையானது இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்’ எனவும் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.