நம் நாட்டின் ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் முன்னோடிகளுள் ஒருவரான தெல்தோட்டை மண் ஈன்றெடுத்த அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் அவர்களின் நினைவுப் பேருரையொன்றை நடாத்த தெல்தோட்டை ஊடக மன்றம் திட்டமிட்டுள்ளது.
இலக்கிய உலகுக்கு ஆற்றிய அரும்பணிகள் பற்றி இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் இந்த வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான நினைவுப் பேருரை ‘தெல்தோட்டை–புதியதோர் மாற்றத்தை நோக்கி’ என்ற கருப்பொருளில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி (சனிக்கிழமை) மு.ப. 9.30 மணிமுதல், தெல்தோட்டை, புலவர் மலையடிவாரத்தில் அமைந்துள்ள, க/ எனசல் கொல்ல மத்திய கல்லூரிக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
நினைவுப் பேருரையினை கலாநிதி அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் (நளீமி) நிகழ்த்த உள்ளார்.
இந்நிகழ்வின் மற்றுமொரு முக்கிய அம்சமாக அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரை ஜனரஞ்சகப்படுத்தும் நோக்கில் 1965இல் புலவர் பிறந்த நூற்றாண்டு விழாவின் போது புலவர் பற்றிய சிறப்பிதழொன்றை வெளியீட்டமைக்காக தினகரன் தேசிய நாளிதழிற்கும்,புலவர் இயற்கையெய்திய நூற்றாண்டினை அனுஷ்டிக்கும் வகையில் 2018ம் ஆண்டு ஜுன் மாதம் ஞானம் சஞ்சிகையின் 217ஆவது இதழை புலவர் பற்றிய சிறப்பிதழாக வெளியிட்ட ஞானம் சஞ்சிகையின் இணை ஆசிரியர் வைத்தியர் ஞானம் ஞானசேகரன் அவர்களுக்கும், புலவர் பற்றிய சிறப்பிதழொன்றை வெளியிட்ட தென்னிந்தியாவின் இளம்பிறை எம். ஏ. ரகுமான் அவர்களுக்கும் ,’அருள்வாக்கி நேசன்’ விருது வழங்கி தெல்தோட்டை ஊடக மன்றம் பாராட்டி கௌரவிக்கவுள்ளது.
மேலும்,தெல்தோட்டை பிரதேச முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றமாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் பற்றி எழுதப்பட்ட சிறப்பு பாடல் வெளியீடு, அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் நினைவு மலர் வெளியீடு உட்பட இன்னும் பல நிகழ்வுகள் அன்றைய தினம் இடம்பெறவுள்ளன.