இலங்கையின் கல்வி சீர்திருத்தங்களுக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என பெலாரஸ் நாட்டின் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
பெலாரஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது அமைச்சர் பிரேமஜயந்த பெலாரஷ்ய கல்வி அமைச்சர் அன்ட்ரே இவானெட்ஸிடம், இலங்கையிலிருந்து அதிகளவான இளைஞர்கள் பெலாரஸ் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்து உயர்கல்வியை தொடர்வதாக தெரிவித்தார்.
சமகால கல்வி முறைகளுக்கு ஏற்றவாறு இலங்கையில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக பாடத்திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பான உண்மைகளை அமைச்சர் பிரேமஜயந்த விளக்கினார்.
பெலாரஸ் நாட்டில் அதிகளவான இலங்கை மருத்துவ மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் கல்வித்துறை நினைவூட்டியதுடன், இம்மாணவர்களின் எதிர்கால நலன் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, பெலாரஸ் மற்றும் இலங்கை கல்வி அமைச்சுக்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பான வரைபு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.