காஷ்மீர் கறுப்பு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயத்தின் முன்னாலும், இந்திய தூதரகத்தின் முன்னாலும் நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காஸ்மீர் விடுதலைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெறும் அட்டூழியங்களையும், ஆக்கிரமிப்புப் படைகள் அப்பாவி காஷ்மீரிகளை மனிதாபிமான மற்ற முறையில் நடத்துவதையும் இவர்கள் தமது பதாதைகளில் சுட்டிக் காட்டியிருந்தனர்.
ஜக்கிய நாடுகள் சபையும் ஜ.நா. மனித உரிமை அமைப்பும் இவ்விடயத்தில் தலையிட்டு இரு நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்து வைக்க வேண்டும் எனவும் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கான நியாயமான போராட்டத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதுடன் காஷ்மீர் மக்களின் நிரந்தர துயரங்களை நோக்கி உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், காஷ்மீர் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப காஷ்மீர் பிரச்சனைக்கு ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் அடிப்படையில் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை வலியுறுத்துவதாகவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மேலும், கடந்த ஏழு தசாப்தங்களாக ஆக்கிரமிப்புப் படைகள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரில் செய்த மனித உரிமை மீறல்களை கண்டித்த அவர்கள் காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப காஷ்மீரில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்ய உலக நாடுகளும் கடமைப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பிறகு போராட்டக்காரர்கள் மகஜர்களை கையளித்தனர். இந்த போராட்டத்தில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான ஐ.ஏ. ஹலீலுர் ரஹ்மான், எம்.எம். முஸம்மில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை கொழும்பிலுள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் ‘காஷ்மீர் கறுப்பு தினத்தை’ குறிக்கும் வகையில் கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி (27) பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரில் இந்தியப் படைகள் செய்த அட்டூழியங்களைச் சித்தரிக்கும் ஆவணப்படங்கள் மற்றும் புகைப்படங்களும் இதில் காண்பிக்கப்பட்டன. பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செய்திகளும் பார்வையாளர்கள் முன்நிலையில் வாசிக்கப்பட்டன.
மேலும் பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் ஃபரூக் புர்கி ,விருந்தினர்கள், பேச்சாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் போது, ஜம்மு- காஷ்மீரில் பல தசாப்தங்களாக இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிரான நியாயமான போராட்டத்திற்காக ஜம்மு ரூ காஷ்மீர் மக்களுக்கு மரியாதை செலுத்தினார்.