காதிகளாக பெண்களையும் நியமிக்க நடவடிக்கை: நீதி அமைச்சர்

Date:

காதி நீதிபதிகளாக பெண்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இதற்கு தேவையான திருத்தங்களை முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம்  தொடர்பில் பிரத்தியேக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தற்போது வரையப்படுகின்ற முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் திருத்தச் சட்டமூலம் ஜனவரி மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்திலிருந்து நியமிக்கப்பட்ட துறைசார் நிபுணர்களைக் கொண்ட குழுவின் பரிந்துரைகளின் பிரகாரமே முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த விடயம் தொடர்பில் தொடர்பில் கடந்த டிசம்பர் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்த விடயத்துடன் தொடர்புடைய தரப்பின் பிரதிநிதிகள் ஆகியோரை பாராளுமன்றத்திற்கு அழைத்து கலந்துரையாடினேன்.

இச்சட்டத்தில் திருந்தங்களை மேற்கொள்ள அவர்களினால் இதன்போது அனுமதி வழங்கப்பட்டது. அது மாத்திரமல்லாமல், இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய, பலதார திருமண விடயத்தில் தற்போதைய சூழ்நிலையில் எந்தவித மாற்றமும் கொண்டுவரப்படமாட்டாது.

அது போன்று காதி நீதிமன்ற முறையிலும் எந்த மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது. எனினும், இந்த முறைமையினை வினைத்திறனாக மேற்கொள்ள சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், காதி நீதிபதிகளாக பெண்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், காதி நீதிபதிகளின் தகமைகள் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினாலேயே நிர்ணயிக்கப்படும்’ எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 1951ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து திருத்தச் சட்டத்தில் கடந்த பல தசாப்தங்களாக எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால், குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவென 2009 இல் அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால், ஓய்வுபெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

சுமார் 9 வருட கால இழுபறியின் பின்னர் இக்குழுவின் உறுப்பினர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.

இதனால், சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் அறிக்கையை அமுல்படுத்துவதில் இழுபறி தோன்றியது.

நீதி அமைச்சர்களாக 2009ஆம் ஆண்டின் பின்னர் பதவி வகித்த பலரும் இச்சட்டத்தை திருத்துவதற்கான தமது ஆர்வத்தை வெளிப்படுத்திய போதிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையுடன் இதில் திருந்தங்களை மேற்கொள்ள தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...