2022 ஆம் ஆண்டில் இலங்கையில் குறைந்தது 5 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்றும், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் எனவும் உலக வங்கி கூறுகிறது.
இலங்கையில் ஏற்கனவே வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் என வகைப்படுத்தப்பட்டவர்களின் வாழ்க்கைச் செலவில் 65% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக வங்கிக் குழுமத்தின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான பிரதித் தலைவர் மார்டின் ரைஸர் தெரிவித்துள்ளார்.
வறுமை கோட்டு வரம்புக்கு அப்பாற்பட்டவர்களின் வாழ்க்கைச் செலவில் 57 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அனைத்து இலங்கையர்களுக்கும் குறிப்பிடத்தக்க நலன் இழப்பை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்
நாட்டின் நெருக்கடி நிலை பற்றிய ஒரு கட்டுரையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பல ஆண்டுகளாக தவறான பொருளாதார நிர்வாகம், பலவீனமான நிர்வாகம், மோசமான கொள்கை தேர்வுகள் மற்றும் கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவின் யுக்ரைன் ஆக்கிரமிப்பு போன்ற வெளிப்புற நிகழ்வுகளின் தாக்கங்கள் காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.