உக்ரைன்-ரஷ்யா போர் : ரஷ்ய ஜனாதிபதிக்கு சவால் விடுத்த அமெரிக்க ஜனாதிபதி!

Date:

உக்ரைன் மீதான ரஷ்யா போர் ஓராண்டை நிறைவு செய்கிறது. ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கான எந்தவொரு அறிகுறிகளும் தென்படவில்லை.

மாறாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றதும், அங்கு ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிய அவர் கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடிக்கு இராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்ததும் போரை மேலும் தீவிரப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புதின் நேற்று முன்தினம் அந்த நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

சுமார் 2 மணித்தியால உரையில் பெரும்பாலும் உக்ரைன் போர் குறித்து அவர் உரையாற்றியுள்ளார்.

இது குறித்து ரஷ்ய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

‘போரை தொடங்கியது அவர்கள்தான். போரை நிறுத்துவதற்காகவே நாங்கள் பலத்தை பயன்படுத்துகிறோம். அமைதியான முறையில் விட்டுக் கொடுத்துச் செல்வதற்கே முயன்றோம். ஆனால், நமது முதுகில் குத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டன. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனை பகடைக்காயாக மேற்கத்திய நாடுகள் பயன்படுத்துகிறார்கள். உக்ரைன் போருக்கு மேற்கத்திய நாடுகள்தான் முழுப் பொறுப்பாகும்’ என கூறினார்.

‘உள்ளூர் மோதலை உலகளவில் வளர்க்க மேற்கத்திய நாடுகள் விரும்புகிறார்கள். அதற்கேற்ப நாங்கள் சரியான முறையில் பதிலளிப்போம். ரஷ்யாவை தோற்கடித்துவிட முடியும் என்று தப்புக் கணக்கு போட்டு இந்த மோதலை அவர்கள் தொடங்கிவிட்டார்கள். ரஷ்யாவை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது’ எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதினின் இந்த உரைக்கு பதிலளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவால் உக்ரைனை வீழ்த்த முடியாது என உறுதிபட கூறியுள்ளார்.

உக்ரைனை தொடர்ந்து அதன் அண்டை நாடான போலாந்து சென்ற ஜோ பைடன் தலைநகர் வார்சாவில் உரையாற்றியுள்ளார்.

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில் ,

ரஷ்யா தாக்குதல் ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், உக்ரைன் வலிமையுடன் போராடுகின்றது. பெருமையுடன் நிற்கின்றது.

முக்கியமாக சுதந்திரத்திற்காக போராடுகின்றது. நாடுகளின் இறையாண்மைக்காகவும், ஆக்கிரமிப்பு இல்லாமல் வாழும் மக்களின் உரிமைக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் நாங்கள் நிற்போம்.

அதை செய்வோம். எந்த தடையாக இருந்தாலும், இந்த விஷயங்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்.உக்ரைனை ஒரு போதும் ரஷ்யா வெற்றி கொள்ள முடியாது. உக்ரைன் இன்னும் சுதந்திரமாகவும், தன்னம்பிக்கையுடனும் உள்ளது.

அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய நாடுகளோ, ரஷ்யாவை கட்டுப்படுத்தவோ அல்லது அழிக்கவோ நினைக்கவில்லை. புதின் கூறியபடி, ரஷ்யாவை தாக்கும் திட்டம் ஏதும் மேற்கத்திய நாடுகளிடம் இல்லை என்று ஜோ பைடன் கூறினார்.

முன்னதாக வார்சாவில் ஜோ பைடனை வரவேற்ற போலாந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் துடா, ஜோ பைடன் உக்ரைனுக்கு பயணம் செய்ததன் மூலம் சுதந்திர உலகம் எதற்கும் அஞ்சவில்லை என்பதை சுட்டிக்காட்டியதாக கூறினார்.

மேலும் சுதந்திர உலகத்தையும் உக்ரைனையும் பாதுகாப்பதும், ஆதரவளிப்பதுமே நேட்டோவின் பங்கு என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...