உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் போரை, ரஷ்யர்களில் ஒரு தரப்பினர் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றனர்.
அப்படி எதிர்ப்பு தெரிவிப்பவர்களை ஜனாதிபதி புதின் தலைமையிலான அரசாங்கம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.
இந்த சூழலில் ரஷ்யாவின் ஆர்க்காங்கெல்ஸ்க் நகரை சேர்ந்த 20 வயதான பல்கலைக்கழக மாணவி ஒலேஸ்யா, உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதோடு போரில் ரஷ்யாவை விமர்சிக்கும் வகையில் தனது நண்பர்கள் பதிவிட்ட பதிவுகளையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
இந்த விவகாரத்தில் ஒலேஸ்யாவை கைது செய்த பொலிஸார் அவரை வீட்டு சிறையில் வைத்தனர்.
மேலும், அவரது காலில் ‘எலக்ட்ரானிக் டேக்’ பொருத்தி அவரது ஒவ்வொரு அசைவுகளையும் பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.
வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஒலேஸ்யா செல்போனில் பேசவும், இணையதளத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியதாகவும், ரஷ்ய ஆயுதப் படைகளை இழிவுபடுத்தியதாகவும் ஓலேஸ்யா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.