பொலன்னறுவை தம்பல பிரதேசத்தில் கும்புக்கன் வாவியில் தவறி விழுந்து தந்தையும் மகளும் நேற்று உயிரிழந்துள்ளனர்.
தந்தையும் மகளும் செல்ஃபி எடுக்கச் சென்ற போது வாவியில் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆற்றில் விழுந்த இருவரும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்கள்.
காத்தான்குடியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஷாஜகான் என்பவரும் (வயது 46) மற்றும் அவரது பிள்ளைகள் அடங்களாக 5 பேர் பொலன்னறுவை மாவட்டம் தம்பல கும்புக்கன் ஆற்றை பார்வையிடச் சென்றுள்ளனர்.
பாடசாலை விடுமுறை என்பதால் பிள்ளைகள் சகிதம் கடந்த திங்கட்கிழமை மாலை இவர்கள் காத்தான்குடியில் இருந்து பொலன்னறுவை மாவட்டத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்கள் ஆற்றை பார்வையிடச் சென்று, ஆற்றின் அருகில் நின்று செல்பி எடுக்க முற்பட்ட போது ஆசிரியரின் மகள் சயான் பரிசாத் (12 வயது) ஆற்றினுள் விழுந்துள்ளார்.
தனது மகளை காப்பாற்ற தந்தை ஆற்றினுள் இறங்க ஆறு ஆழமாக இருப்பதனால் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதையடுத்து ஆசிரியரின் மனைவி மற்றும் ஏனைய பிள்ளைகளும் கூக்குரலிட்டு அழ பொது மக்கள் ஒன்று திரண்டு நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது இருவரின் சடலங்களும் பொலன்னறுவை வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.